கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

27 June, 2016

கடவுளானாலும் இப்படித்தான் இருக்க வேண்டும்...!




உண்மையைத் தேடி ஒருவன்... ஞானி ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்தான். அவனை எப்படியாவது வீட்டிற்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பி விட சாத்தான் முடிவு செய்தது. அதனால் ஞானியின் வீட்டுக்குள் நுழையமுடியாதபடி அந்த மனிதனுக்கு பல இடையூறுகள் ஏற்பட்டன.

அழகிய பெண்ணொருத்தி அவனை அணுகி இன்முகத்துடன் கொஞ்சு மொழியில் பேசி அவனை தன்னுடன் அழைத்துச் சென்றாள். சிறிது தூரம் சென்ற உடன் சட்டென சுய உணர்வு பெற்றவனாக அவளிடம் இருந்து விடுபட்டு திரும்பி விட்டான். அவ்வாறு திரும்பும் வழியில் பிரபு ஒருவர் அவனைக் கண்டு பேசினார். தனது அரண்மனைக்கு வரும்படி அவனை அன்புடன் அழைத்தார்.

அந்த சமயத்தில் சாத்தான் தன்னிடம் இருந்த அத்தனை விதமான அஸ்திரங்களையும் ஒன்று விடாமல் எய்தான். பொருள், காமம், புகழ், அதிகாரம், அந்தஸ்து என அத்தனையும் அணிவகுத்து நின்று ஒன்றன் பின் ஒன்றாக அவனைத் தாக்கின. எனினும் எதனாலும் அவனது உறுதியை அசைக்க முடியவில்லை.

எந்த மயக்கங்களுக்கும் ஆட்படாமல் இயல்பாக அவற்றை எல்லாம் உதறிவிட்டு ஞானியிடம் வந்து சேர்ந்தான் அவன். தனது அத்தனை ஆயுதங்களும் செயலற்றுப் போய் சாத்தான் ஒரு மூலையில் போய் சோர்ந்து ஒடுங்கினான்.

ஞானியிடம் வந்து நிமிர்ந்து பார்த்த அந்த மனிதன் அதிர்ச்சி அடைந்தான். இவர் ஆசனத்தில் அமர்ந்திருக்க இவரைச் சுற்றி சீடர்கள் தரையில் அமர்ந்திருந்தனர். ஒரு குருவுக்கு இருக்க வேண்டிய அடிப்படை இலக்கணமான அடக்கம் இவரிடம் இல்லையே என்று எண்ணினான் அவன்.

ஞானி இவன் வந்ததை கவனிக்கவில்லை. அங்கிருந்த எவரும் இவனை பொருட்படுத்தவும் இல்லை. வந்தவரை வரவேற்பது, இன்சொல் கூறுவது என்ற எந்த நல்ல பழக்கமும் இல்லை என்று எண்ணினான்.


சற்றுநேரம் மவுனமாக அங்கே நடப்பனவற்றைக் கவனித்தான். ஞானியின் பேச்சில் உயர்ந்த தத்துவங்களோ, கோட்பாடோ, ஏதும் காணப்படவில்லை. ஒரு படிப்பறிவற்ற கிராமவாசி கூட இதைவிட சிறப்பாகவே பேசுவான் என்று எண்ணிய அவனுக்குள் ஏளனப் புன்னகை உதித்தது. மக்கள் மடையர்கள், யாரையாவது தொழுது வணங்கவேண்டும். அதற்காக எந்த பரதேசியையாவது பிடித்துக்கொண்டு தொங்குவார்கள் எல்லாக் காலங்களிலும் என்று நினைத்தவாறு ஒன்றுமே சொல்லாமல் மவுனமாக வந்த வழியே வெளியேறினான்.


அவன் வெளியேறியதும் குரு அந்த இடத்தின் மூளையில் உற்றுப் பார்த்தார். நீ இவ்வளவு மெனக்கெட்டிருக்க வேண்டியதே இல்லை. அவன் தொடக்கத்தில் இருந்தே உன்னுடையவன்தான் என்றார் சாத்தானிடம் சிரித்தபடியே. (ஜென் கதைகள் என்ற நூலிலிருந்து)

நீதி : இறைவனைத் தேடும் பொழுது பொருள், புகழ், பெருமை, ஆசை, எல்லாவற்றையும் உதறத்துணிந்தவர்கள் கூட இறைவன் இப்படித்தான் இருப்பான் என்று தங்கள் மனதில் தாங்கள் உருவாக்கிக் கொண்டுள்ள கருத்துக்களில் இருந்து விடுபட மாட்டார்கள்

தற்போது... இன்னும் ஒருபடி மேலேபோய் எவ்வளவு நேரத்தில் கடவுளை பார்க்க வேண்டும்... எவ்வளவு ரூபாயில் கடவுளை பார்க்க வேண்டும் என்பதெல்லாம் கூட பக்தர்கள் முடிவுசெய்யும் காலம் எப்போதோ வந்துவிட்டது...!

இறுதியாய் கடவுள்  அவரவர் எண்ணங்களிலே வாழ்கிறார்...!

0 comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...