கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

30 November, 2010

பச்சைக்கிளி


சுரைக்காய் பிஞ்சின்
தலையில்
மிளகாய்ப் பழத்தைச்
செருகி
இடையில்
மல்லிகை இலைகள்
சிறகாய்ப்
பின்புறம் தாழை மடலை
வைத்தால் பச்சைக் கிளியே
உன்போல் படைப்பு!
உன்போல் படைப்பு!

வட்டத் தலையே
சிவப்பு மூக்கே!
சின்ன இறகே!
நீண்ட வாலே!
கண்ணற் கிளியே
சொன்னது
பிசகா?
வர்ணனை கேட்டு
வாழ்த்த மறுப்பாய்
புகழ்ச்சொல் கேட்டும்
போற்றிட மாட்டாய்!

காரணம் அறிவேன்
சின்னக் கிளியே!
கூண்டில் உன்னைப்
போட்டதனாலே
தூண்டிற் புழுவாய்த்
துடிக்கிறாய் நீயும்!

சிறையில் உன்னை
அடைத்து மகிழ்ந்தேன்!
இன்று தெரிந்தேன்
சிறைமிகக் கொடிது!
சிறைமிகக் கொடிது!
மன்னித் திடுவாய்!
மன்னித் திடுவாய்!
பொன்மொழிப் பாவாய்
மன்னித்திடுவாய்!

என்சிறை முடிந்ததும்
உன்சிறை உடைப்பேன்!
சிறையின் கஷ்டம்
சிறையால் உணர்ந்தேன்!
அடிமைப்புள்ளே!
அழகுக் கிள்ளாய்!
அனுபவம் பெற்றேன்!
அனுபவம் பெற்றேன்!

வந்ததும் தருவேன்
விடுதலை வாழ்வு!
பறப்பாய், பறப்பாய்
உயரப் பறப்பாய்!
கட்டிய கால்கள்
விடுபடும்; உடனே
எட்டிய மட்டும்
ஏறிப் பறப்பாய்!
 
எழில் நிறப் பெண்ணே
எங்கும் பறப்பாய்!
கூண்டில் உன்னை
அடைத்தேன் கிளியே!
மன்னித்து விடுக!
கூண்டின் கஷ்டம்
புரிந்து கொண்டேன்!
கூண்டின் கஷ்டம்
புரிந்துகொண்டதால்
கூண்டுக்கிளியுனைத்
திறந்துவிடுவேன்!
ஆனால் கிளியே
கூண்டின் கஷ்டம்
புரிந்தோர் இங்கு
ஆண்டிட வந்தார்
மாண்டிட எம்மைக்
கூண்டினில் போட்டார்!
 
ஏனோ கிளியே!
ஏனோ கிளியே!
பதிலும் சொல்வாய்
பச்சைக் கிளியே!
உன்னை நான்
அடைத்ததால்
என்னை அடைத்தார்
என்றே சொல்வாய்
நன்று கிளியே;

நீ யாரை அடைத்ததால்
நானுன்னை
அடைத்தேனோ?


(1953 ல் சிறையில் எழுதியது)

0 comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...